சிஎஸ்கே கேப்டன் பதவியை துறந்தார் எம் எஸ் தோனி; புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!

Updated: Thu, Mar 21 2024 16:31 IST
சிஎஸ்கே கேப்டன் பதவியை துறந்தார் எம் எஸ் தோனி; புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் முதலே சென்னையில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்னதாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இளம் வீரர்களுடன் இணைந்து தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 

அதேபோல் சில தினங்களுக்கு முன் ஆர்சிபி அணி வீரர்களும் இப்போட்டிக்காக சென்னை வந்து தங்களது பயிற்சிகளை தொடங்கினர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அறிவிப்பு ஒன்று வெளியானது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படும் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். 

மேலும் மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் அணி கேப்டன்களுக்கான போட்டோஷூட்டிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றதன் மூலம் இது உறுதியானது. 

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐபிஎல் 2024ஆம் ஆண்டு தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார்” என்று அறிவித்துள்ளது.  

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசன் என்ற பேச்சுகளும் அடிப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது தனது கேப்டன் பதவியையும் மகேந்திர சிங் தோனி துறந்துள்ளது அவர் இத்தொடருடன் ஓய்வை அறிவிக்கவுள்ளதை உறுதிசெய்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. 

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிட்டத்திட்ட 15 சீசன்களாக வழிநடத்தி வந்த மகேந்திர சிங் தோனி இதுவரை 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5,082 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்எஸ் தோனி தலைமையில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை