சிஎஸ்கேவின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ? அன் கேப்ட் வீரராக களமிறங்கும் தோனி!

Updated: Fri, Aug 16 2024 23:32 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மேற்கொண்டு இம்முறை கூடுதல் வீரர்களை தக்கவைப்பதற்கான கோரிக்கைகளையும் ஐபிஎல் அணிகள் பிசிசிஐ யுடன் முன்வைத்துள்ளன. 

அதேசமயம் எதிர்வரும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களின் தேர்வு மற்றும் ரிடெய்ன் விதிமுறைகளில் ஒருசில மாற்றங்களை செய்யும்படியும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தங்கள் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைப்பதற்காக பழைய விதிமுறையை மீண்டும் கொண்டுவரும் படி பிசிசிஐயிடம் கோரிக்கையை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியானது. 

ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலங்களில், ஏதேனும் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு அந்த வீரரை அன்கேப்ட் வீரராக ஐபிஎல் அணிகள் தேர்வு செய்துகொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் இந்த விதிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பிசிசிஐயால் கைவிடப்பட்டது. இந்நிலையில் தான் சிஎஸ்கே நிர்வாகம் இந்த விதியை மீண்டும் அமல்படுத்த கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சிஸ்கேவைத் தவிர்த்த மற்ற ஐபிஎல் அணிகள் ஏதும் இந்த விதிமுறைக்கு ஆதரவை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கேவின் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுள்ளதாகவும், எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒருவேளை இந்த விதிமுறை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சிஎஸ்கே அணிக்கு இது மிகப்பெரும் லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏனெனில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடைசியாக 2019 இல் இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பின் 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்தாலும், தற்போதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரை மேலும் ஒரு ஆண்டு விளையாட வைக்க சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டிவருவதன் காரணமாகவே, இந்த கோரிக்கையை பிசிசிஐயிடம் முன்வைக்கப்பட்டது. 

தற்போது வரை, தோனி ஒரு கேப்ட் பிளேயராக விளையாடுகிறார் மற்றும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம் ரூ.12 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது.  தற்போது பிசிசிஐ பழைய விதிமுறையை மீண்டும் கொண்டுவரும் பட்சத்தில் மகேந்திர சிங் தோனியை 'அன் கேப்ட்' வீரராக கருத்தில் கொண்டு சிஎஸ்கே நிர்வாகம் அவரை அதிகபட்சமாக ரூ.4 கோடிக்கு தக்க வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் அந்த அணிக்கு  ரூ.8 கோடிவரை மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை