ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 279 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இறுதியில் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது நாதன் லயனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

இந்த நிலையில், காயம் காரணத்தினால் நாதன் லயனை இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் பாட் கம்மின்ஸ். இருப்பினும், அணிக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்பிய லயன் பேட் செய்தார். 13 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பேட் செய்ததனால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 15 ரன்கள் கிடைத்தது. அதனால் ஆஸ்திரேலியா 370 ரன்கள் முன்னிலை பெற்றது.

Advertisement

இது குறித்து பேசிய நாதன் லையன், “பாட் கம்மின்ஸ் என்னிடம் இரண்டாவது இன்னிங்ஸில் நீங்கள் பேட் செய்ய வேண்டாம் என்றார். ஆனால், நான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்டு மற்றும் மருத்துவக் குழுவிடம் பேசினேன். நான் பேட் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களிடம்  பேசினேன். நான் அதிகமாக மருத்துவக் குழுவினருடன் நேரம் செலவிட்டேன். 

பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில் அணிக்கு எனது பங்களிப்பை வழங்குவதற்காக பேட் செய்வதற்கு களமிறங்கினேன். நான் மருத்துவக் குழுவோடு செலவிட்ட நேரம் இரண்டாவது இன்னிங்ஸில் என்னை 13 பந்துகள் வரை தாக்குப் பிடிக்க உதவி செய்தது. நான் பேட் செய்வது குறித்து நிறைய பேச்சுகள் இருந்தன. ஆனால், அணிக்கு எனது பங்களிப்பை வழங்கி என் அணி வீரர்களுக்கு உதவிட பேட் செய்தேன்.  

ஆட்டத்தின் கடைசி நாளும் இதனை செய்வேன். காயம் காரணத்தினால் கடந்த இரண்டு நாள்களாக மன வேதனையில் உள்ளேன். ஆஷஸ் தொடரை இங்கு வெல்ல வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதனை நான் பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால், இந்த காயம் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News