மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று இலங்கையில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நேபாள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய யூஏஇ அணிக்கு கேப்டன் ஈஷா ரோஹித் மற்றும் தீர்த்தா சதீஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கேப்டன் ஈஷா ரோஹித் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரினிதா ரஞ்சித்தும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து தீர்த்தா சதீஷ் 9 ரன்களிலும், சமைரா 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கவிஷா - குஷி சர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
பின்னர் 22 ரன்களில் கவிஷாவும், 36 ரன்களில் குஷி சர்மாவும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் யுஏஇ அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. நேபாள் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் இந்து பர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணியில் சம்ஜானா கட்கா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய சிதா ரானா மகர், கபிதா குமார், கேப்டன் இந்து பர்மா ருபினா சேத்ரி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சம்ஜானா அரைசதம் கடந்து அசத்தினார்.
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சம்ஜானா கட்கா 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களைச் சேர்த்து அணியையும் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதன்மூலம் நேபாள் மகளிர் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணி பதிவுசெய்த முதல் வெற்றியாகவும் இது அமைந்தது.