நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கனடா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் மற்றும் ராயன் பதான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 14 ரன்களை எடுத்திருந்த ராயன் பதான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் கிர்டனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஆரோன் ஜான்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேப்டன் நிக்கோலஸ் கிர்டனும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
பின்னர் களமிறங்கிய ஹர்ஷ் தாகெர் 15 ரன்களிலும், ரவிந்தர்பால் சிங் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் மொவ்வா 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் கனடா அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 169 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
அமெரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ஜுவானோய் ட்ரைஸ்டேல், ஷாட்லி வான் ஷால்க்விக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து அமெரிக்க அணியானது இலக்கை நோக்கி களமிறங்க இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னரும் மழை தொடர்ந்த காரணத்தால் இப்போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிட பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.