முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இத்தொடரின் இறுதிப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற நிலையில், இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சௌத் ஷகீல் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களை எடுத்த விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் முகமது ரிஸ்வான் 4 பாவுண்டரி, ஒரு சிக்ஸர் என 46 ரன்னிலும், சல்மான் ஆகா 45 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் தயாப் தாஹிர் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ஃபஹீம் அஷ்ரப் 27 ரன்களையும், நஷீம் ஷா 19 ரன்களையும் சேர்த்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்டனர், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடியா நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கான்வேவுடன் இணைந்த வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேன் வில்லியம்சன் 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து டெவான் கான்வேவும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் மற்றும் டாம் லேதம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியையும் ஏறத்தாழ உறுதிசெய்தனர். பின்னர் 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களைச் சேர்த்திருந்த டேரில் மிட்செல் தனது விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் நிதானமாக விளையாடிய டாம் லேதமும் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் கிளென் பிலீப்ஸ் 20 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 2 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்த முத்தரப்பு தொடரையும் நியூசிலாந்து அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.