இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அணியின் கேப்டனாக இளம் வீரர் கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டார். 

Advertisement

அதனைத் தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த இந்திய அணியில் கேப்டன் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நேற்று ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த தொடர் முழுவதுமே அவர் கேப்டனாகவும், ஹார்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி இந்திய அணியின் கேப்டனாக முதன்முறையாக செயல்பட உள்ள ரிஷப் பந்திற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே வேளையில் தான் கேப்டன் பொறுப்பு ஏற்றது குறித்து ரிஷப் பண்ட்டும் தற்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் கேப்டன் பதவி எனக்கு கிடைத்ததை நினைத்து என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. ராகுல் காயம் அடைந்த பிறகு புதிய கேப்டன் அறிவிப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் எனக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட இருப்பது தெரியும்.

நான் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டது ஒரு அற்புதமான உணர்வு. நான் எனது சொந்த மைதானத்தில் விளையாடும் போட்டியிலேயே எனக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி. என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பினை வழங்கிய பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினர் ஆகியோருக்கு நன்றி.

எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்துவேன். மேலும் என்னால் முடிந்த அளவு நான் என்னுடைய பங்களிப்பை இந்திய அணிக்காக வழங்கி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுத் தரவேண்டும் என்பதில் மட்டுமே உறுதியாக இருக்கிறேன். என்னுடைய நலம் விரும்பிகள், எனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், என்னுடன் பயணித்தவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisement

ஒரு கேப்டனாக நான் செயல்பட இருப்பது மிகவும் பெருமையான விஷயம் என்றாலும் அதே வேளையில் ஐபிஎல் தொடரில் நான் ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டு உள்ளதால் அதில் இருந்து நிறைய விசயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். எந்தெந்த இடத்தில் தவறுகள் நடந்து உள்ளதோ அதை எல்லாம் தற்போது படிப்படியாக சரி செய்து வருகிறேன். நிச்சயம் ஐபிஎல்-லில் கேப்டனாக பணியாற்றிய அந்த அனுபவம் இந்திய அணியை கையாளவும் எனக்கு கை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து இளம் வயதிலேயே இந்திய டி20 அணியை வழிநடத்தும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் நிகழ்த்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News