இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

Updated: Thu, Jul 27 2023 22:25 IST
இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்! (Image Source: Google)

பாகிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில்  இலங்கை முதலில் பேட் செய்து தனது முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்புக்கு 576 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்  அப்துல்லா ஷஃபீக் 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 19 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக அஹா சல்மான் 132 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

பாகிஸ்தானைக் காட்டிலும் அதிக அளவில் ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கேப்டன் திமுத் கருணாரத்னே  தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் இலங்கை அணி 188 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நௌமன் அலி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம், பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை