தடுமாறி நின்ற பேர்ஸ்டோவ்; க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - வைரலாகும் காணொளி!

Updated: Thu, Apr 04 2024 22:39 IST
தடுமாறி நின்ற பேர்ஸ்டோவ்; க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - வைரலாகும் காணொளி! (Image Source: BCCI)

அஹ்மதாபாத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை சேர்த்து அசத்தியது. 

இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 89 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 6 பவுண்டரிகளை விளாசி 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ராகுல் திவேத்தியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான் ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் - பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜானி பேர்ஸ்டோவ் இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை வீச வந்த நூர் அஹ்மத் பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்படி தனது முதல் ஓவரின் முதல் பந்தை வீசிய நூர் அஹ்மத் அதனை கூக்ளியாக வீச, அந்த பந்தை தடுத்து விளையாட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோவ் கூக்ளியை சரியாக கணிக்க தவறினார். 

 

இதனால் பந்து அவரது ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதன் காரணமாக சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் நூர் அஹ்மதின் முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோவ் போல்டாகி வெளியேறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை