NZ vs PAK, 1st T20I: பாபர் ஆசாம் அரைசதம் வீண்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!

Updated: Fri, Jan 12 2024 15:19 IST
NZ vs PAK, 1st T20I: பாபர் ஆசாம் அரைசதம் வீண்; பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து! (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கெப்டன் ஷாஹின் அஃப்ரிடி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் பாகிஸ்தான் பந்துவீச்சில் பிரித்துமேய்ந்தார். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வில்லியம்சன்னுடன் இணைந்த டேரில் மிட்செலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இருப்பினும் மறுமுனையில் அதிரடியைக் கைவிடாத டேரில் மிட்செல் 22 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து மிரட்டினார். இதற்கிடையில் கிளென் பிலீப்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதுவரை அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செலும் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்த நிலயில் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் அதிரடி காட்டிய மார்க் சாப்மேன் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 26 ரன்களை எடுத்த ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக விளௌயாடி வந்த சைம் அயூப் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 27 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து முகமது ரிஸ்வானும் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

பின்னர் இணைந்த பாபர் ஆசாம் - ஃபகர் ஸ்மான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸமான் 15 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய இஃப்திகார் அஹ்மத் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 24 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து சத்தினார். 

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய அசாம் கான் 10 ரன்களுக்கும், கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அதுவரை சிறப்பாக விளையாடி வந்த பாபர் ஆசாமும் 6 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 57 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரன்களைச் சேர்க்க தடுமாறினர். 

இதனால் 18 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதீ 4 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே, பென் சியர்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை