நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்கு முன் மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது.

Advertisement

மழை நின்ற பின் தொடங்கிய 37 ஓவர்களாக குறைப்பட்டு டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சாப்மேன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

Advertisement

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்தனர். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் மார்க் சாப்மேன் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திராவும் 79 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய டாம் லேதம் ஒரு ரன்னிலும், கிளென் பிலீப்ஸ் 22 ரன்னிலும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 20 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 38 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, மற்ற வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷ் தீக்ஷனா ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News