நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலனது அணிக்கு டாம் லேதம் - டெவான் கான்வே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே அரைசதம் கடக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் லேதம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேன் வில்லியம்சன் - ஹென்றி நிக்கோலஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல்நாள் ஆட்டம் விரைவாக முடிக்கப்பட்டது.
இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 26 ரன்களுடனும், ஹென்றி நிக்கோலஸ் 18 ரன்களுடனும் தொடர்ந்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இதில் கேன் வில்லியம்சன் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டைச் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 215 ரன்களைச் சேர்த்திருந்த வில்லியம்சன் அட்டமிழக்க, அடுத்து வந்த டேரில் மிட்ட்செலும் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனார். ஆனால் மறுமுனையில் சிறப்பாப ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி நிக்கோலஸும் தனது இரட்டைச் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 580 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 2 விக்கெட்டுகளையும், தனஞ்செய டி சில்வா, பிரபாத் ஜெயசூர்யா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை அணி.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ஓஷாதா ஃபெர்னாண்டோ 6 ரன்களிலும், குசால் மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து அதிர்ச்சிக்கொடுத்தனர். அதன்பின் இணைந்த திமுத் கருணரத்னே - பிரபாத் ஜெயசூர்யா இணை விக்கெட்டை இழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்து வைத்தனர்.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, டக் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 554 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.