நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது.. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜனவரி 02) நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய குசால் பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 17 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

Advertisement

இதனையடுத்து குசால் பெரேராவுடன் இணைந்த கேப்டன் சரித் அசலங்காவும் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசி ஸ்ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த குசால் பெரேரா 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிக்ஸர்களை விளாசித்தள்ளிய கேப்டன் சரித் அசலங்கா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 24 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேரா 44 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சத்ததைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 101 ரன்களை எடுத்திருந்த நிலையில் குசால் பெரேராவும் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைக் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஸகாரி ஃபால்க்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிம் ராபின்சன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க் சாப்மேன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 69 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் விளையாடிய மிட்செல் ஹெய் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இறுதியில் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டேரில் மிட்செலும் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் மிட்செல் சான்ட்னர் 14 ரன்களையும், ஸகாரி ஃபால்க்ஸ் 21 ரன்களையும் சேர்த்த நிலையிலும் நியூசிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை அணி தரப்பில் சரித் அசலங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News