களத்தில் இருக்கும்போது நான் கேப்டனாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் - ஒல்லி போப்!

Updated: Sun, Aug 25 2024 10:38 IST
Image Source: Google

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 236 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் சதமடித்து அசத்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

பின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார். அவருக்கு துணையாக தினேஷ் சண்டிமால் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அரை சதம் கடக்க, அந்த அணி 326 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மேலும் இங்கிலாந்து அணிக்கு 205 ரன்களையும் இலக்காக நிர்ணயித்தது. 

பின்னர் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஜோ ரூட் 62, ஹாரி புரூக் 32, ஜேமி ஸ்மித் 39 ரன்களைச் சேர்த்ததன் மூலம், 57.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப், “இது புதிய பந்திற்கு ஏற்ற ஆடுகளம் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் 15-20 ஓவர்களைத் தாண்டியவுடன், உண்மையில் இங்கு ரன்களைச் சேர்க்க முடியும் என்று எங்களுக்குத் தெரியும். இப்போட்டியில் பந்துவீச்சாளர்கள் எங்களை முன்னோக்கி வழிநடத்திய விதத்திற்கு நன்றி, அதிலும் வோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகியோர் எதிரணியின் டாப் ஆர்டர் மூவரையும் ஆரம்பத்திலேயே வீழ்த்தினர்.

அது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதேசமயம் இப்போட்டியில் ஜோ ரூட் விளையாடியதை பார்க்கும் போது அவர் மீது முழு நம்பிக்கை இருந்தது. அவர் தொடர்ந்து எங்களுக்காக பல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேற்கொண்டு தனது முதல் சதத்தை விளாசிய ஜேமி ஸ்மித்திற்கு எனது வாழ்த்துகள். ஏனெனில் கடந்த முறை விட்டத்தை இம்முறை அவர் செய்து காட்டியுள்ளார். அவருக்கு இதைவிட மகிழ்ச்சியான வேறு விஷயம் இருக்க முடியாது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

நான் இந்த டெஸ்டில் இருந்து எடுக்கக்கூடிய ஒரு விஷயமாக ஒன்றை மட்டும் தான் நினைக்கிறேன். அது நான் களத்தில் இருக்கும்போது நான் கேப்டனாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவது, ஆனால் பேட்டிங் செய்யும் போது நான் ஒரு பேட்டர் என்பதை மட்டும் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி லண்டன் லார்ட்ஸில் நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை