இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016ஆம் ஆண்டில் நடந்த இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது.

Advertisement

இந்நிலையில் 7ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3ஆவது அலை வரலாம் என்ற பேச்சு கிளம்பியதாலும் இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதன்படி 16 அணிகள் இடையிலான 7ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன. 

தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. 

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24ஆம் தேதி துபாயில் சந்திக்கிறது.

Advertisement

இந்த கொரோனா காலத்தில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் அங்கு தான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்திருப்பதால் இங்குள்ள சீதோஷ்ண நிலைமையும், மைதானத்தின் தன்மையும் பெரும்பாலான வீரர்களுக்கு இப்போது அத்துப்படி. ஆக, ஐபிஎல் அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு பலமாக அமையும்.

2007ஆம் ஆண்டு தோனி  தலைமையில் உலக கோப்பைக்கு முத்தமிட்ட இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் படையெடுத்துள்ளது. தோனி ஓய்வு பெற்று விட்டாலும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோலி, ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், இஷான் கிஷன் என்று பேட்டிங் வரிசையில் அதிரடிக்கு குறைவில்லாத வீரர்கள் உள்ளனர். 

அதே போல் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாக்குர், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2ஆவது முறையாக கோப்பையை கையில் ஏந்தலாம். இன்னும் தனது கேப்டன்ஷிப்பில் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் விராட் கோலிக்கு அந்த ஏக்கத்தை தணிக்க இது அருமையான சந்தர்ப்பமாகும். 

Advertisement

இந்த உலககோப்பையுடன் அவர் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவது நினைவு கூரத்தக்கது. ஆனால் இந்தியாவுக்கு, ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கடும் சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. 

டி20 கிரிக்கெட்டில் எப்போதும் சரவெடியாய் வெடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, இவின் லீவிஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹெட்மயர், பூரன் என்று நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது அசுர பலமாகும். இதே போல் ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் அவர்களும் அபாயகரமான அணி தான். அதனால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

Advertisement

உலகக்கோப்பை தொடரின் முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஓமன்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மக்முதுல்லா தலைமையிலான வங்காதேச அணி, கைல் கோட்ஸிர் தலைமையிலான ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News