தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று டர்பனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலம், திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், திலக் வர்மா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 25 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 23 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதன்மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த போட்டியில் சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், இப்போட்டியில் நாங்கள் சிறந்த தொடக்கத்தை பெற தவறியதே எஙளது தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் இரண்டு இன்னிங்ஸிலும் மைதானத்தில் பவுன்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் உதவியை கொடுத்தது. அதன்பின் பந்து பழையதாக சுழற்பந்து வீச்சாளர்களும் அபாரமாக செயல்பட்டனர். இப்போட்டியில் நாங்கள் ஒரு சிறந்த தொடக்கத்தை பெற விரும்பினோம், ஆனால் அங்குதான் நாங்கள் ஆட்டத்தை இழந்தோம். மேலும் சஞ்சு சாம்சன் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடினார்.
Also Read: Funding To Save Test Cricket
அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய அவர் எங்கள் பந்து வீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார். இதனால் இனி வரும் போட்டிகளில் அவரை விரைவில் ஆட்டமிழக்க செய்வதற்கான திடங்களை நாங்கள் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் அவர் அப்படி அடித்தால், அதை நிறுத்துவது மிகவும் கடினம். இந்த போட்டியில் டெத் ஓவரில் பந்துவீசிய ஜெரால்ட் கோட்ஸி மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டது எங்களுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.