ஐபிஎல் 2025: முதல் பாதி தொடரை தவறவிடும் மயங்க் யாதவ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுத்ததுடன், அந்த நியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே லக்னோ அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த அக்டோபரில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் மயங்க் யாதவ் இந்திய அணிக்கு அறிமுகமானார்.
ஆனால் அத்தொடரிலேயே அவர் காயத்தை சந்தித்ததுடன், அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பின் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னரே மயங்க் யாதவை ரூ.11 கோடிக்கு தக்கவைத்திருந்தது.
ஆனால் அவர் தற்போதும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் இரண்டாம் பாதியில் நிச்சயம் விளையாடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த ஐபிஎல் சீசனிலும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மயங்க் யாதவ், அதன்பின் காயம் காரணமாக தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே