PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் அணி 556 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து அதிரடி தொடக்கம்!

Updated: Tue, Oct 08 2024 20:08 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயானமுதல் டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.  அதேசமயம் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய சைம் அயூப் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

இதனைத்தொடர்ந்து அப்துல்லா ஷஃபிக்குடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களின் 5ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 102 ரன்களில் அப்துல்ல ஷஃபிக் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஷான் மசூத்தும் 151 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பாபர் அசாமும் 30 ரன்களுடன் நடைடைக் கட்ட, பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களை குவித்தது.

இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை சௌத் சகீல் 35 ரன்களுடனும், நசீம் ஷா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களையும் கடந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நஷீம் ஷா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீலும் 82 ரன்களையும், அடுத்து வந்த அகா சல்மான் அதிரடியாக விளையாடி தனது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் கேப்டன் ஒல்லி போல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் ஸாக் கிரௌலியுடன் இணைந்த ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களைச் சேர்த்தது. இதில் ஸாக் கிரௌலி 64 ரன்களுடனும், ஜோ ரூட் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 460 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை