பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள்  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சாட் பௌஸ் - வில் யங் இணை களமிறங்கினர். 

Advertisement

இதில் வில் யங் 19 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் வந்தது முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாட் பௌஸ் அரைசதம் கடந்த நிலையில், 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் மிட்செலுடன் இணைந்த கேப்டன் டாம் லேதமும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெரில் மிட்செல் தனது 3ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். முன்னதாக கடந்த போட்டியிலும் இவர் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 129 ரன்களைச் சேர்த்திருந்த டெரில் மிட்செல் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சதத்தை நெருங்கிய கேப்டன் டாம் லேதம் 98 ரன்களில் ஆட்டமிழந்து 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிதளவில் சோபிக்கவில்லை.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ராவுஃப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News