AFG vs PAK, 3rd ODI: முஜீப் உர் ரஹ்மான் போராட்டம் வீண்; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!

Updated: Sat, Aug 26 2023 23:25 IST
AFG vs PAK, 3rd ODI: முஜீப் உர் ரஹ்மான் போராட்டம் வீண்; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்! (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆசிய அணிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. 

அதன் ஒருபகுதியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறக்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல் ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஃபகர் ஸமான் 27 ரன்களிலும், இமாம் உல் ஹக் 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் பாபர் ஆசாம் 60 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 67 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அகா சல்மான் 38 ரன்களையும், முகமது நவாஸ் 30 ரன்களையும் சேர்த்து உதவினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் குலபுதின் நைம், ஃபரீத் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 ரன்களுக்கும், இப்ராஹிம் ஸத்ரான் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 13 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரியாஸ் ஹசன் 34 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய குல்புதில் நைப், முகமது நபி, ரஷித் கான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷஹிதுல்லா கமலும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மான் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 64 ரன்களில் முஜீப் உர் ரஹ்மான் விக்கெட்டை இழந்தார். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 48.4 ஓவர்களி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும், ஷஹீன் அஃப்ரிடி, ஃபஹீம் அஸ்ரஃப், முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை