சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு விழுந்த மிகப்பெரும் அடி? வெறு இடத்திற்கு மாற்ற ஐசிசி திட்டம்!

Updated: Mon, Nov 27 2023 20:31 IST
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு விழுந்த மிகப்பெரும் அடி? வெறு இடத்திற்கு மாற்ற ஐசிசி திட்டம் (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அடிக்கடி களத்திலும் களத்திற்கு வெளியேயும் மோதி வருவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன.

அந்த வரிசையில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பை ஆகிய 2 தொடர்களிலுமே பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது. முன்னதாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் திரும்ப நடைபெற்றாலும் பாதுகாப்பு அம்சங்களில் குறைகள் இருப்பதாக கருதும் இந்தியா 2023 ஆசிய கோப்பையில் விளையாட தங்களுடைய அணியை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. அதற்கு எங்கள் நாட்டுக்கு நீங்கள் வராமல் போனால் உங்கள் நாட்டில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை நாங்களும் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.

இருப்பினும் ஜெய் ஷா ஆசிய கவுன்சில் தலைவராக இருப்பதால் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளையும் இலங்கை மண்ணில் நடத்தி வெற்றி கண்டது. மறுபுறம் ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதால் 2023 உலகக் கோப்பையை புறக்கணித்தால் ஐசிசி’யிடம் கிடைக்க வேண்டிய பணம் தங்களுக்கு கிடைக்காத என்பதை உணர்ந்து இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான் அணி விளையாடியது.

இந்நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் நீண்ட காலங்கள் கழித்து நடைபெற உள்ளது. அதில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் புள்ளி பட்டியலில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளன. ஆனால் இன்னும் பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலைகள் திருப்தியளிக்காத காரணத்தால் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடுவதற்கு தயக்கத்தை காட்டுவதாக செய்திகள் வெளிவந்தது.

குறிப்பாக இருநாட்டுக்கும் இடையே நிலவும் தற்போதைய எல்லை பிரச்சினையும் விரிசலும் இதே போல நீடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அரசு அனுமதி கொடுக்காது என்று தெரிய வருகிறது. அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

அல்லது 2023 ஆசிய கோப்பை தொடரை போலவே பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடமான துபாயிலும் நடைபெறும் என்று தெரிய வருகிறது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து தங்கள் நாட்டில் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது என்று காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இது மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை