கடந்த இரு வாரங்களுக்கு முன் ராவல்பிண்டியில் நியூஸிலாந்து - பாகிஸ்தான் ஒருநாள் தொடர் தொடங்க இருந்தது. ஆனால், போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் திடீரென நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரை ரத்து செய்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, இந்த முடிவை எடுத்திருப்பதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

Advertisement

நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறிய அதே காரணத்தைக் கூறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் நவம்பர், டிசம்பரில் மேற்கொள்ள இருந்த பாகிஸ்தான் பயணத்தையும் ரத்து செய்தது.

Advertisement

பாதுகாப்புக் காரணங்களைக் கூறி நியூஸிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் தொடரை ரத்து செய்தது பாகிஸ்தான் வாரியத்துக்குப் பெரும் நெருக்கடியையும், நிதிரீதியாகப் பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து அணி நிர்வாகம் தங்களுக்கு கிடைத்த மின்அஞ்சலை அடிப்படையாக வைத்துதான் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்துள்ளது. ஆனால், அந்த மின்அஞ்சல் உண்மையில் இந்தியாவிலிருந்து வந்துள்ளது, அதனுடைய விபிஎன் சிங்கப்பூரில் இருப்பதாக பாகிஸ்தான் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, பாகிஸ்தான் வாரியத்தின் இணையதளத்துக்குப் பேட்டிஅளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், “நியூஸிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒட்டுமொத்த தொடரையும் ரத்துசெய்வதற்கு முன், பாகிஸ்தான் அரசு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, முறையாக கிரிக்கெட் தொடரை நடத்த என்ன செய்தது என்பதை சிந்தித்துப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.

Advertisement

ஒரு கிரிக்கெட் தொடரை தொடங்கும் முன் ஏராளமான ஆய்வுகள் செய்வோம் என்பது நமக்குத் தெரியும். முறையான விசாரணை நடத்தப்பட்டு, பயணம் செய்யும் அணிகளின் பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும். வீரர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும், வர வேண்டும் என அனைத்தும் முடிவு செய்யப்பட்டு, அதன்பின்புதான் தொடர் நடத்த அனுமதிதரப்படும்.

நியூஸிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் அரசால் மதிக்கப்பட்டார்கள், விரும்பப்பட்டார்கள், அவர்களுக்கு மறக்கமுடியாத வகையில் ஏதேனும் செய்ய நினைத்தார்கள். அவ்வாறு ஏதேனும் மிரட்டல் இருந்தால், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்கலாம், பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து முடிக்கும் வரை பொறுத்திருக்கலாம்.

பெரிய கண்ணோட்டத்தில் பார்த்தால், நாம் ஒரு நாடு, நாமும் முடிவு எடுக்க வேண்டும் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஏதாவது முடிவு எடுப்பது அவசியமாகிறது. ஒருநாடு நமக்குப் பின்னால்இருந்தாலும் பராவாயில்லை, ஆனால், மற்ற நாடுகளும் நியூஸிலாந்தைப் போல் அதே தவறைச் செய்வார்கள் என நான் நினைக்கவில்லை. 
அனைவரும் நாகரீகமுள்ள, அறிவார்ந்த நாடுகள், அந்த நாடுகள் இந்தியாவை பின்பற்றக்கூடாது. கிரிக்கெட் விளையாட்டு உறவுகளை மேம்படுத்த வேண்டும், ஆனால், இந்தியாவில் சூழல் மோசமாக இருக்கிறது. எங்களுக்கும் மிரட்டல்கள் வந்தன, ஆனால் எங்கள் கிரிக்கெட் வாரியம் எங்களை இந்தியாவுக்கு துணிச்சலாக அனுப்பியது.

Advertisement

கரோனா பரவல் நேரத்தில் இங்கிலாந்துக்கு துணிச்சலாகச் சென்றோம், கிரிக்கெட் விளையாடினோம். போலியான மின்அஞ்சல்களை நம்பி தொடரை ரத்து செய்தால், இந்த விவகாரத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு சரியான தீணியை நியூஸிலாந்து வழங்குகிறது என நான் நம்புவேன். இது சரியான வழியல்ல” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News