டி20உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் துபாயில் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13ஆவது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.

Advertisement

இந்தப் போட்டியின்போது தேநீர் இடைவேளையில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், மைதானத்தில் நமாஸ் செய்தார். இந்தக் காட்சியைக் குறி்ப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கருத்துத் தெரிவித்திருந்தார்.

Advertisement

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பாபர், ரிஸ்வான் பேட் செய்ததும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ததும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதும் அற்புதமாக இருந்தது. இதில் சிறந்தது என்னவென்றால், ரிஸ்வான், தேநீர் இடைவேளையின்போது, மைதானத்தில் இருந்த ஏராளமான இந்துக்கள் முன்னிலையில் நமாஸ் செய்ததாகும். இது உண்மையில் எனக்கு மிகச்சிறப்பானதாக இருந்தது” எனத் தெரிவி்த்தார்.

வக்கார் யூனுஸ் கருத்துக்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. விளையாட்டில் எவ்வாறு மதம் புகுந்தது என்று காட்டமாகக் கருத்துக்கள் தெரிவி்த்தனர். இந்தியாவில் கோடிக்கணக்கான முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள், பாகிஸ்தானில் லட்சக்கண்கான இந்துக்களும் இருக்கிறார்கள். விளையாட்டு என்பது விளையாட்டாகத்தான் இருக்க வேண்டும் மதங்களுக்கு இடையே போட்டி இருக்கக் கூடாது என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வக்கார் யூனுஸ் கருத்து விஷத்தன்மை மிகுந்தது, தேவையற்ற கருத்துக் கூறிய வக்கார் கண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். மிகஅனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரரான வக்கார் யூனுஸிடம் இருந்து இதுபோன்ற தரம்கெட்ட கருத்து வந்தது வேதனைக்குரியது என்று நெட்டிஸன்கள் கொந்தளித்தனர்.

தன்னுடைய கருத்தின் வீரியத்தை உணர்ந்த வக்கார் யூனுஸ் ட்விட்டரில் மன்னிப்புக் கோரினார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் பரபரப்பான நேரத்தில், நான் சில கருத்துக்களைப் பதிவிட்டேன்.

Advertisement

அந்த கருத்துக்கள் மூலம் யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடவில்லை. என்னுடைய கருத்துக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன், நான் எதையும் உள்நோக்கோடு செய்யவில்லை, அது முழுக்க உணர்ச்சியின் அடிப்படையில் நடந்த தவறு. இனம், நிறம், மதம் ஆகியவற்றைக் கடந்து விளையாட்டு மக்களை ஒன்று சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News