இந்த தோல்வி வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!

Updated: Fri, Apr 26 2024 15:12 IST
இந்த தோல்வி வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி விராட் கோலி, ராஜத் பட்டிதார் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்க்ளையும், ராஜத் பட்டிதார் 50 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இப்போட்டி எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. பந்துவீச்சில் சில ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். அதேபோன்று பேட்டிங்கிலும் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் இலக்கை நோக்கி வெற்றிகரமாக செல்ல முடியாமல் போனது. முதலில் பேட்டிங் செய்தால் எங்களால் நிறைய ரன்களை அடிக்க முடிகிறது. அதுதான் எங்களது அணிக்கு வேலையும் செய்கிறது.

ஆரம்பத்தில் சில வெற்றிகளை பெறுவதற்கு முன்னதாக நாங்கள் முதலில் பந்து வீசினால் வெற்றி பெறுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால் அது எங்களுக்கு உதவிசெய்யவில்லை. அதன் பின்னர் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்று வந்தோம். இந்நிலையில் தற்போது மீண்டும் தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற முடியாது. இந்த குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை