ENG vs SL, 3rd Test: நிஷங்கா அரைசதம்; வெற்றியை நோக்கி இலங்கை அணி!

Updated: Mon, Sep 09 2024 09:07 IST
Image Source: Google

இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது கேப்டன் ஒல்லி போப்பின் சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 325 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் மிலன் ரத்நாயக்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே 9 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 3 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமால் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.

அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் அரைசதத்தை பதிவுசெய்திருந்த நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  இருவரும் தங்கள் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்டனர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதன்மூலம் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களைச் சேர்த்திருந்தது.

இதனையடுத்து நேற்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தனஞ்செயா டி சில்வா 64 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 54 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தனஞ்செயா டி சில்வா 69 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 54 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் ஹல், ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்மாக ஜேமி ஸ்மித் 67 ரன்களையும், டேன் லாரன்ஸ் 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்ட்நேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பதும் நிஷங்கா 53 ரன்களுடனும், குசால் மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை