சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பிசிபி ஒப்புதல்!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்தும் படியும் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் மட்டுமே நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியாக உள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது.
அதே நேரத்தில், சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி இப்போது இந்த தொடரை ஹைபிரிட் மாடலில் விளையாட பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாவிட்டால், தொடரை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை அவர்களிடமிருந்து பறிக்க ஐசிசி முடிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அட்டவணையை இறுதிசெய்யும் முனைப்பில் ஐசிசி நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் எதிர்வரும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வரியமும் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புகொண்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வரியம் ஐசிசியிடம் தங்களுக்கான வாருவாயை அதிகரிக்கவும், அதேசமயம் 2031ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடக்கும் அனைத்து ஐசிசி நிகழ்வுகளும் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைகள் ஏற்கபடும் பட்சத்தில் இந்தியாவில் நடத்தப்படும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஏனெனில் 2031 வரை இந்தியா நான்கு ஐசிசி தொடர்களை நடத்த உள்ளது. அவற்றில் சில இந்தியாவை இணை-தொகுப்பாளராகக் கொண்டிருக்கும். அதில் குறிப்பாக 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை இலங்கை, வங்கதேசத்துடன் இணைந்து இந்தியா நடத்தவுள்ளது. அதன்பிறகு 2031ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொட்ர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. எனவே, பாகிஸ்தான் இத்தொடர்களில் ஹைபிரிட் மாடலில் வேறு இடத்தில் விளையாட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.