நாங்கள் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஹர்லீன் தியோல் 47 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 51 ரன்களையும், நிலாக்ஷி டி சில்வா 48 ரன்களையும், விஷ்மி குணரத்னே 36 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், “முழு அணியையும், குறிப்பாக பேட்ஸ்மேன்களையும் நினைத்து பெருமைப்படுகிறோம். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட விரும்பினோம், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். அதற்கேற்ற வகையில் நாங்கள் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஒருபோதும் மேம்படுவதை நிறுத்த விரும்பவில்லை, பேட்டிங், பவுலிங் அல்லது பீல்டிங் என பல பகுதிகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும்.
Also Read: LIVE Cricket Score
எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து காயமடைகிறார்கள், அதை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், பயிற்சியாளர்கள் அதில் பணியாற்றி வருகின்றனர்.நானும் ஸ்மிருதியும் தவிர மற்ற பேட்ஸ்மேன்களும், அவர்கள் பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்நே ராணா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இலங்கையில் உள்ள சூழ்நிலையை கணித்து அதற்குப் பழகி, இந்த கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.