பிஎஸ்எல் தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பெஸ்வர் ஸால்மி - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெஸ்வர் ஸால்மி அணி முதலில் இஸ்லாமாபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் உஸ்மான் கவாஜா, முகமது அக்லக், பிராண்டன் கிங், இஃப்திகார் அகமது என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த காலின் முன்ரோவும் 44 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் இறுதியில் ஹசன் அலி ஒருசில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த முகமது வாசிம் ஜூனியரும் அதிரடி ஆட்டத்தில் அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹசன் அலி 45 ரன்களையும், காலின் முன்ரோ 44 ரன்களையும் சேர்த்தனர்.