PSL 2023: லாகூர் கலந்தர்ஸை சுருட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் குவாலிஃபையர் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு உஸ்மான் கான் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் உஸ்மான் கான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, 33 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ரிஸ்வானும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் வந்த கீரன் பொல்லார்ட் - டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கீரன் பொல்லார்ட் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 34 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குஷ்டில் ஷா ஸ்கோர் கார்டுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 22 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. லாகூர் தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய லாகூர் கலந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மிர்ஸா தாஹிர் 8 ரன்களிலும், ஃபகர் ஸ்மான் 6 ரன்களிலும், அப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் வந்த ஹுசைன் தாலத் 4, சிக்கந்தர் ரஸா ஒரு ரன்னுடனும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம் பில்லிங் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 14.3 ஓவர்களில் லாகூர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்களில் ஆல் அவுட்டானது. முல்தான் அணி தரப்பில் ஷெல்டன் காட்ரோல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்சை வீழ்த்தி மூன்றாவது முறையாக பிஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.