PSL 2023: மிரட்டல் சதமடித்த பாபர் ஆசாம்; பெஷாவர் அணி 240 ரன்கள் குவிப்பு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பெஷாவர் ஸால்மி அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி பெஷாவர் அணிக்கு பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி தள்ளினர். இதன்மூலம் இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 162 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தன. இதில் அயூப் 34 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் 59 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து தனது அதிரடியை காட்டினார். ஆட்டத்தின் 19ஆவது ஓவர் வரை களத்திலிருந்து பாபர் ஆசாம் 65 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 115 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் ரோவ்மன் பாவெல் தலா 2 பவுண்டரி, சிக்சர்கள் என பறக்கவிட்டு 35 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ரன்களைக் குவித்தது.