பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; முல்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயூப் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 46 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டாம் கொஹ்லர் காட்மோரும் 5 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக ஹசீபுல்லா கானும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பாபர் ஆசாம் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஹசீபுல்லா கானும் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய் ஆசிஃப் அலியும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ரோவ்மன் பாவெல் 23 ரன்களையும், அமர் ஜமால் 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களைச் சேர்த்தது. முல்தான் அணி தரப்பில் உஸாமா மிர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டன் 2 வ்விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.