பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sun, Mar 10 2024 12:25 IST
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி! (Image Source: Google)

ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைடடுத்து களமிறங்கிய லாகூர் அணியின் தொடக்க வீரர் மிர்ஸா தாஹிர் 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஃபகர் ஸமான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 9 ரன்களிலும், கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த அப்துல்லா ஷஃபிக் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களில் தனது விக்கெட்டி இழந்தார். பின்னர் இணைந்த சிக்கந்தர் ரஸா - டேவிட் வைஸ் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன்களையும், டேவிட் வைஸ் 3 சிக்சர்களுடன் 24 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் ஸாகிர் மஹ்மூத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஜேம்ஸ் வின்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத்தும் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கீரன் பொல்லார்டும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த  டிம் செய்ஃபெர்ட் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக கராச்சி கிங்ஸ் அணி 113 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த சோயப் மாலிக் - இர்ஃபான் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, கராச்சி அணியின் வெற்றியும் உறுதியானது. 

அச்சமயத்தில் 35 ரன்கள் எடுத்திருந்த இர்ஃபான் கான் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அன்வர் அலி, அரஃபத் மின்ஹாஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஆனாலும் இறுதிவரை களத்தில் இருந்த சோயப் மாலிக் 27 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை