பிஎஸ்எல் 2024: சைம் அயுப், ரோவ்மன் பாவெல் காட்டடி; கலந்தர்ஸ் அணிக்கு 212 ரன்கள் இலக்கு!
9ஆவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயுப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இன்னிங்ஸின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளியதுடன், முதல் விக்கெட்டிற்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து மிரட்டினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயுப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 48 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து இரண்டு ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து சதத்தை நெருங்கிய சைம் அயுப்பும் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 88 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் விளையாடிய ஆசிஃப் அலி 6 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கல் என 46 ரன்கள் சேர்த்திருந்த ரோவ்மன் பாவெல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 12 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ரன்களை குவித்தது. லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி லாகூர் அணி விளையாடவுள்ளது.