பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளத். இதில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ல கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 6 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பின் களமிறங்கிய அஹ்சன் பாட்டி 8 ரன்களுக்கும், ஜஹந்தத் கான் 12 ரன்களுக்கும் என நடையைக் கட்டினார்.
பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடிய நிலையில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சிக்கந்தர் ரஸாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கிடையில் மறுமுனையில் நங்கூரம் போல் நின்று விளையாடி வந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபர்ஹான் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 72 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஜார்ஜ் லிண்டே 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் ஹசன் அலி, தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் மிர் ஹம்ஸா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.