பிஎஸ்எல் 2025: ஃபகர் ஸமான், சாம் பில்லிங்ஸ் அதிரடியில் லாகூர் கலந்தர்ஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - முகமது நயீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது நயீம் 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபகர் ஸமானுடன் இணைந்த அப்துல்லா ஷஃபிக் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அப்துல்லா ஷஃபிக் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
மேற்கொண்டு அவருடன் இணைந்து விளையாடி வந்த டேரில் மிட்செலும் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த ஃபகர் ஸமான் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் பில்லிங்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 50 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களைச் சேர்த்தது. கிளாடியேட்டர்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன், அப்ரார் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கிளாடியேட்டர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்களான கேப்டன் சௌத் ஷகீல் ஒரு ரன்னிலும், ஃபின் ஆலன் ரன்கள் ஏதுமின்றியும், ஹசன் நவாஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கிளாடியேட்டர்ஸ் அணி 9 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - ரைலீ ரூஸோவ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் குசால் மெண்டிஸ் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரைலீ ரூஸோவ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஃபஹீம் அஷ்ரஃப் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.