பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!

Updated: Sun, Apr 20 2025 10:38 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பெஷாவர் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தலா 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் கொஹ்லர் காட்மோர் மற்றும் முகமது ஹாரிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் காட்மோர் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் முகமது ஹாரிஸ் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து 52 ரன்களைச் சேர்த்த கையோடு கொஹ்லர் காட்மோரும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தாலத் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களிலும், மிட்செல் ஓவன் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும், அப்துல் சமத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரனக்ளையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைக் குவித்தது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் டேவிட் வில்லி, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் உபைத் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய முகமது ரிஸ்வான் 15 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 20 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப்பும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய உஸ்மான் கான் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய காம்ரன் குலாம், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ஆஷ்டன் டர்னர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

மேற்கொண்டு அபாரமாக விளையாடி வந்த உஸ்மான் கானும் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் முல்தான் சுல்தன்ஸ் அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெஷாவர் அணி தரப்பில் அலி ரஸா 4 விக்கெட்டுகளையும், ஆரிஃப் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஓவன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை