இந்த வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலமாக மாறப்போகிறார் - இர்ஃபான் பதான்!

Updated: Wed, May 17 2023 20:20 IST
Punjab Kings’ Prabhsimran Singh bats with finesse, power: Irfan Pathan (Image Source: Google)

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பல்வேறு இளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. குறிப்பாக ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, நேஹல் வதேரா, துருவ் ஜுரேல், அனுஜ் ராவத் போன்ற வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகிற்கு தெரிந்துள்ளனர். ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்கு பினிஷிங் ரோலில் விளையாடி வருகிறார். 13 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 400 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். 

ஜெய்ஸ்வால் கிட்டத்தட்ட 600 ரன்களை எட்டி அதிக ரன்கள் அடித்தவர்களில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். இதில் நான்கு அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். இவர்களுக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படாத பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் பிரப்சிம்ரன் இந்த வருட ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்திருக்கிறார் மற்றும் இந்த தொடரில் இரண்டு அரைசதங்களும் அடித்திருக்கிறார். 13 போட்டிகளில் 330 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார்.

இந்த சீசனின் முதல் பாதியில் எதிர்பார்த்த அளவிற்கு இவர் செயல்படவில்லை. ஆனால் அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது பேட்டிங்கை வானுயரப் புகழ்ந்து இந்திய அணியின் எதிர்காலமாக இருப்பார் என்றும் பேசியுள்ளார் முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான். 


இதுகுறித்து பேசிய அவர், “பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரராக விளையாடும் பிரப்சிம்ரனுக்கு இந்திய அணியில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடிய ஷார்ட்கள் அனைத்தும் நேர்த்தியாக இருந்தது. மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்கலின்றி அடிக்கிறார். 

பல்வேறு விதமான ஷார்ட்கள் வைத்திருக்கிறார். அத்துடன் மிகவும் இளம் வயதாகவும் இருக்கிறார். இப்படிப்பட்ட நேர்த்தியான டெக்னிக் கொண்ட வீரர்களை இந்திய அணியில் எடுப்பதற்கு விரும்புவார்கள். மேலும் 22 வயதே ஆவதால் பல ஆண்டுகள் பயன்படுவார் என்கிற வகையிலும் எடுப்பார்கள். ஐபிஎல் என்பது இதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. 

இவரை போன்ற திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இளம் வீரராக இருக்கும்பொழுதே கண்டறிந்து அவர்களை இந்திய அணியின் எதிர்காலமாக மாற்றுவதற்கு உதவும் மிகப்பெரிய தொடராக இருந்து வருகிறது. இந்த வருட ஐபிஎல் தொடரும் பல்வேறு இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. பிரப்சிம்ரன் தவிர்க்க முடியாத இந்திய அணியின் எதிர்காலமாக உருவாவார் என்று நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை