இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் கமிந்து மெண்டிஸ் மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீண்டது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் தனது சதத்தை பதிவுசெய்ய, மறுபக்கம் குசால் மெண்டிஸ் தனது அரைசதததைப் பதிவுசெய்தார்.  இதன்மூலம், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்களையும், குசால் மெண்டீஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 70 ரன்களையும், கேன் வில்லியம்சன் 55 ரன்களையும், டேரில் மிட்செல் 57 ரன்களையும், கிளென் 49 ரன்களையும் எடுத்ததன் காரணமாக 340 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகலையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 35 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் இணைந்த திமுத் கருணரத்னே - தினேஷ் சண்டிமால் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் சதத்தை நெருங்கிய கருணரத்னே 83 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 61 ரன்களில் தினேஷ் சண்டிமாலும் ஆட்டமிழந்தார். பின்னர் கமிந்து மெண்டிஸும் 13 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்செயா டி சில்வா ஆகியோர் தலா 34 ரன்களுடன் தொடர்ந்தனர். 

இதில் அரைசதம் கடந்து அசத்திய மேத்யூம் 50 ரன்களுடன் நடையைக் கட்ட, மறுபக்கம் தனஞ்செயா டி சில்வா 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 309 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இணைந்த லேதம் - வில்லியம்சன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் வில்லியம்சன் 30 ரன்களிலும், லேதம் 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிரங்கிய ரச்சின் ரவீந்திரா ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் விளையாடிய, டேரில் மிட்செல் 8 ரன்களுக்கும், டாம் பிளெண்டல் 30 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 4 ரன்களுக்கும், மிட்செல் சான்ட்னர் 2 ரன்னுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

ஆனால் மறுமுனையில் அபாரமாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திர அரைசதம் கடந்ததுடன், சத்தை நோக்கி விளையாடி வருகிறார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 68 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News