ரஞ்சி கோப்பை 2025: மும்பைக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரன் குவிப்பில் விதர்பா அணி!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணிக்கு அதர்வா டைடே - துருவ் ஷோரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதர்வா டைடே 4 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பார்த் ரேகாடேவும் 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த துருவ் ஷோரே - டேனிஷ் மாலேவார் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
பின்னர் 9 பவுண்டரிகளுடன் 74 ரன்களைச் சேர்த்த கையோடு துருவ் ஷோரே தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 79 ரன்களை எடுத்திருந்த நிலையில் டேனிஷ் மாலேவாரும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் யாஷ் ரத்தோட் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பின் 45 ரன்கள் எடுத்த கையோடு கருண் நாயர் தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் விதர்பா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யாஷ் ரத்தோட் 47 ரன்களுடனும், அக்ஷய் வத்கர் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மும்பை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஷிவம் தூபே மற்றும் ஷம்ஸ் முலானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், ரோய்ஸ்டன் தியாஸ் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.