ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை 183 ரன்களில் சுருட்டியது தமிழ்நாடு!

Updated: Fri, Feb 23 2024 20:06 IST
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை 183 ரன்களில் சுருட்டியது தமிழ்நாடு! (Image Source: Google)

இந்தியாவின் புகழ்மிக்க கிரிக்கெட் தொடரில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று தொடங்கிய மூன்றாவது காலிறுச்சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய சௌரஷ்டிரா அணிக்கு ஹர்விக் தேசாய் - கெவின் ஜிவ்ரஜனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கெவின் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேக்சன் 22, சட்டேஷ்வர் புஜாரா 2, வசவதா 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்விக் தேசாய் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 83 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதனைத்தொடர்ந்து வந்த பிரெக் மான்கட் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை தக்கவைத்தாலும், மறுமுனையில் விளையாடிய ஜடேஜா, சிராக் ஜனி, பர்த் புத், ஜெய்தேவ் உனாத்கட், யுவராஜ்சின் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சௌராஷ்டிரா அணி 183 ரன்களுக்கு ஆல அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் - விமால் குமார் தொடக்கம் கொடுத்தனர். இதில் விமல் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஜெகதீசன் 12 ரன்களுடனும், சாய் கிஷோர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 160 ரன்கள் பின் தங்கிய நிலையில் தமிழ்நாடு அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை