இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஜனவரி 24ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின. அந்த போட்டியில் சௌராஷ்டிரா அணிக்கு நீண்ட நாட்கள் கழித்து ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக 2022 ஆசிய கோப்பையில் காயமடைந்து வெளியேறிய அவர் அதற்காக அறுவை சிகிச்சை கொண்டு முழுமையாக குணமடைவதற்கு முன்பாக குஜராத் தேர்தலில் மனைவிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisement

அதனால் அடுத்து நடைபெறும் பார்டர் – காவாஸ்கர் கோப்பையில் தேர்வாவதற்கு முதலில் ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடி ஃபார்ம் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை நிரூபிக்குமாறு பிசிசிஐ அவருக்கு நிபந்தனை விதித்தது. அந்த சூழ்நிலையில் அவர் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுதர்சன் 45, பாபா அபாரஜித் 45, பாபா இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக்கான் 50 என முக்கிய வீரர்கள் தேவையான வீரர்களை எடுத்தனர். சௌராஷ்ட்ரா சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 1 விக்கெட் மட்டும் எடுத்த நிலையில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement

அதை தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா அணி தமிழ்நாட்டின் பந்துவீச்சை சமாளிக்க அணியின் தரமான பந்து வீச்சில் 192 ரன்களுக்கு சுருண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மீண்டும் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் அதிகபட்சமாக ஜானி 49 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு தரப்பில் அதிகபட்சமாக மணிமாறன் சித்தார்த் மற்றும் அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 132 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸ்சில் களமிறங்கிய தமிழகத்தை தனது மாயாஜால சுழலில் சிக்க வைத்த ரவீந்திர ஜடேஜா வெறும் 133 ரன்களுக்கு சுருட்டினார்.

குறிப்பாக சுதர்சன் 37, ஷாருக்கான் 2, பாபா இந்திரஜித் 28, ரஞ்சன் பால் 8, விஜய் சங்கர் 10 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்த அவர் அஜித் ராம் 8, சந்திப் வாரியார் 4 என டெயில் எண்டர்களையும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி மொத்தம் 7 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். இறுதியில் 266 ரன்களை துரத்திய சௌராஷ்டிரா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பந்து வீச்சிக்கு சாதகமாக இருந்த சேப்பாக்கம் மைதானத்தில் தமிழகத்தின் தரமான பந்து வீச்சில் ஆரம்ப முதலே தடுமாறியது.

குறிப்பாக நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தை 4/1 தொடக்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் ஒருபுறம் நங்கூரமாக நிற்க எதிர்ப்புறம் கோகில் 0, சகாரியா 1, ஜானி 13, செல்டன் ஜேக்சன் 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அந்த சமயத்தில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட ரவீந்திர ஜடேஜாவும் 25 ரன்களில் அஜித் ராம் சுழலில் சிக்கினார். இருப்பினும் மிடில் ஆர்டரில் போராடிய வசவடா 45 ரன்கள் எடுத்து அவுட்டானது போலவே 9 விக்கெட்டுகள் சரிந்த போதிலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற தேசாய் சதமடித்து பெரிய சவாலை கொடுத்தார்.

ஆனால் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 101 ரன்கள் குவித்து சதமடித்த மகிழ்ச்சியில் கவனத்தை சிதற விட்ட அவரை அவுட்டாக்கிய தமிழ்நாடு சௌராஷ்டிராவை 206 ரன்களுக்கு சுருட்டி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக கடைசி நாளில் ஜடேஜா போன்ற சௌராஷ்ட்ரா வீரர்களின் தடையை தகர்த்து வெற்றி பெறுவதற்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக அஜித் ராம் 6 விக்கெட்களையும் மணிமாறன் சித்தார்த் 3 விக்கட்டுகளையும் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்டனர்.

Advertisement

இருப்பினும் 6 போட்டிகளில் 1 வெற்றியை பெற்ற தமிழகம் லீக் சுற்றின் புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்ததால் நாக் அவுட் சுற்று வாய்ப்பை நழுவ விட்டது. மறுபுறம் 6 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த சௌராஷ்ட்ரா 26 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News