ரஞ்சி கோப்பை 2025: அசாருதீன் அபார சதம்; வலிமையான நிலையில் கேரளா!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய கேரளா அணியில் தொடக்க வீரர்கள் அக்சய் சந்த்ரன் மற்றும் ரோஹன் குன்னுமால் ஆகியோர் தலா 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வருண் நாயனாரும் 10 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த சச்சின் பேபி மற்றும் ஜலஜ் சக்ஸேனா இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஜலஜ் சக்ஸேனா தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சச்சின் பேபி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் சச்சினுடன் ஜோடி சேர்ந்த முகமது அசாருதினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதன்மூலம் கேரளா அணி முதல்நாள் ஆட்டாநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை சச்சின் பேபி 69 ரன்களுடனும், முகமது அசாரூதின் 30 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சச்சின் பேபி 69 ரன்களுடன் நடையைக் கட்டிய நிலையில், அடுத்து களமிறங்கி சிறப்பாக விளையாடிய சல்மான் நிஸா2 52 ரனக்ளையும், அஹ்மத் இம்ரான் 24 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் மறுபக்கம் அபாரமாக விளையாடிய முகமது அசாரூதின் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள முகமது அசாருதீன் 17 பவுண்டரிகளுடன் 149 ரன்களையும், ஆதித்யா சர்வாத் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். குஜராத் அணி தரப்பில் அர்சான் நக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.