ரஞ்சி கோப்பை 2022/23: இரட்டை சதமடித்த மயங்க் அகர்வால்; வலிமையான நிலையில் கர்நாடகா!
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிகட்டத்தை நெருங்குகிறது. சௌராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளும், ஆந்திரா - மத்திய பிரதேசம் அணிகளும் அரையிறுதியில் விளையாடிவருகின்றன.
கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆதன்படி முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் ஒருமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் செய்ய, மறுமுனையில் சமர்த் (3), தேவ்தத் படிக்கல்(9), நிகின் ஜோஸ்(13), மனீஷ் பாண்டே(7), ஷ்ரேயாஸ் கோபால்(15) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மறுமுனையில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 6ஆவது விக்கெட்டுக்கு மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஷரத் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஷரத் 66 ரன்கள் அடித்தார். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய மயன்க் அகர்வால் இரட்டை சதமடித்தார். 429 பந்துகளை எதிர்கொண்டு 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 249 ரன்களை குவித்த மயன்க் அகர்வால் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் கர்நாடக அணி இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது. சௌராஷ்டிரா தரப்பில் சேத்தன் சகாரியா, குஷாங்க் படேல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணியில் ஸ்நெல் படேல், விஸ்வராஜ் ஜடேஜா சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்விக் தேசாய் - ஷெல்டன் ஜாக்சென் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சௌராஷ்டிரா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் தேசாய் 27 ரன்களுடனும், ஜாக்சென் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.