பாகிஸ்தானுக்கு 24 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது. 

Advertisement

இந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3ஆவது மற்றும் கடைசி போட்டி கடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று லாகூர் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த உலகின் நம்பர்-1 டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 8/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்த ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர்.

இதில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்த உஸ்மான் கவாஜா சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவருடன் ஜோடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து 59 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து கிறிஸ் க்ரீன் 79 ரன்கள், அலெஸ் கேரி 67 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 90/1 என்ற நிலையில் உள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் 59 ரன்களில் ஆட்டமிழந்தது ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஒரு சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ஏனெனில் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னி மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் அதன்பின் கடந்த ஒரு வருடமாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். 

அதேசமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். அதன்பின் கடந்த 2 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வரும் அவரை பற்றி இந்த ஒட்டுமொத்த உலகமும் தினந்தோறும் பேசி வருகிறது.

ஆனால் ஸ்டீவ் ஸ்மித் பற்றி யாருமே அதிகமாக விவாதிப்பது கிடையாது. இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்னவெனில் இந்த இருவருமே இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தலா 27 சதங்களை அசால்டாக அடித்துள்ள நிலையில் 28ஆவது சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் சொந்த மண்ணில் மட்டுமே விளையாட பழகி உள்ளார்கள் என்றும் அதன் காரணமாகவே அவர்களால் சமீப காலங்களாக சதங்களை எளிதாக அடிக்க முடியவில்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லதீப் விமர்சித்துள்ளார். 

இதுபற்றி ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் போட்டி நடக்கும்போது வர்ணனை செய்த அவர் பேசியபோது“அவர்களுக்கு அவர்களின் சொந்த மண்ணில் எளிதான பிட்ச்கள் கிடைக்கிறது என நினைக்கிறேன். அவர்கள் ஒரு சில குறிப்பிட்ட இடங்களிலும் காலச் சூழ்நிலைகளிலும் மட்டும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள். இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை பாருங்கள். 

அவர் அடித்த 2 பவுண்டரிகளை தவிர கவர், மிட் விக்கெட், இன் பிரண்ட் போன்ற பகுதிகள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் அவர் ரன்களை அடிக்க தொடங்கும் போது பீல்டர்கள் நிறுத்தப்படுவதால் உடனடியாக அவுட்டாகி விடுகிறார்.

சொல்லப்போனால் சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரை விட இங்கு அவர் சிறப்பாக விளையாடுகிறார். மேலும் தனது இன்னிங்சில் சிறப்பாக தொடக்கம் பெறும் அவர் 25 – 30 ரன்கள் குறைத்துக்கொண்டால் நிச்சயமாக சதமடித்து இருப்பார். விராட் கோலிக்கும் இந்த பிட்ச் சம்பந்தமான பிரச்சனை உள்ளது” என கூறினார். 

இருப்பினும் அவர் கூறும் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவருமே கடந்த காலங்களில் உலகின் அனைத்து இடங்களிலும் சதங்களை அடித்து தங்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என நிரூபித்துள்ளார்கள்.

இப்போதும்கூட சதம் அடிக்க முடியாமல் தவிக்கிறார்களே தவிர அவ்வப்போது இடையிடையே சொந்தமண் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் அரைசதம் அடித்து தங்களை ஒரு தரமான வீரர் என நிரூபித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த 2 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பற்றி சம்பந்தமில்லாத கருத்தை கூறியுள்ள ரஷீத் லத்தீப்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News