அஸ்வினை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்!

Updated: Mon, Apr 29 2024 22:49 IST
அஸ்வினை கடுமையாக விமர்சித்த விரேந்திர சேவாக்! (Image Source: Google)

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நடைப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளைப் பெற்றும் ஏறத்தாழ பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றி, ஒரு தோல்வி என 16 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த அணி தோல்வியடைந்த ஒரே ஒரு போட்டியிலும் கூட கடைசி பந்துவரை போரடியே தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் அணியின் இந்த அபாரமான செயல்பாடுகளுக்கு அந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்துவருவதே காரணம். உதாரணத்திற்கு பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் பந்துவீச்சில் யுஸ்வேந்திர சஹால், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான் உள்ளிட்டோரும் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சீசனில் பெரிதளவி சோபிக்காமல் தவறி வருகிறார். ஏனெனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். மேலும் அவர் இந்த சீசனில் சராசரியாக ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்து வருவது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பிவரும் ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் அஷ்வின் விக்கெட் வீழ்த்தும் பந்துகளை தவிர்த்து வருகிறார். ஏனெனில் இந்த சீசனில் யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் தங்கள் முறையான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.

 

ஆனால் ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஃப் ஸ்பின் வீசினால் ரன்களை கொடுக்க வேண்டும் என எண்ணி கேரம் பந்துகளை மட்டுமே வீசிவருகிறார். அவர் தொடர்ச்சியாக கேரம் பந்துகளை வீசுவதன் காரணமாகவே அவருக்கு விக்கெட்டுகள் வீழ்வதில்லை. என்னை கேட்டால் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அவர் பந்து வீசுவதில்லை.

எனவே என்னை பொறுத்தவரை நான் அந்த அணியின் ஏதேனும் ஒரு பொறுப்பில் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு இனிவரும் போட்டிகளில் வாய்ப்பு வழங்கி இருக்க மாட்டேன். எனது பந்துவீச்சாளர் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் ரன்களை சேமிப்பது பற்றி யோசித்தால் அவருக்கு அணியில் இடம் கிடைக்காது. சொல்லப் போனால் அடுத்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் கூட அவரை தேர்வு செய்வது குறித்து யோசிக்கமாட்டேன்” என விமர்சித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை