ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாகத் துவங்குகிறது. பொதுவாகவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில், இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் முந்தைய எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. 

Advertisement

இம்முறை 10 அணிகள் விளையாட உள்ளதால் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement

இந்த தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த 2 வாரங்களாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில் எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா போன்ற முக்கிய வீரர்களுடன் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட் ஆகியோரும் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்முறை சுரேஷ் ரெய்னா, டு பிளெசிஸ் போன்ற வீரர்களை வாங்காமல் கோட்டை விட்ட அந்த அணி நிர்வாகம் அதற்கு ஈடாக டேவன் கான்வே, ஆடம் மில்னே ஆகியோரை வாங்கியுள்ளது. மேலும் ராஜ்வர்தனே போன்ற இளம் வீரர்களும் தேவையான அளவுக்கு அந்த அணியில் நிறைந்துள்ளார்கள். எனவே அனுபவம் மற்றும் இளமை கலந்துள்ள சென்னை அணி எம்எஸ் தோனி தலைமையில் இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு 5ஆவது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் நிலவுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் இப்போது வரை சென்னை அணிக்கு இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கேப்டன் எம்எஸ் தோனி தொடர்ந்து கேப்டன்ஷிப் செய்து வருகிறார். இந்தியாவிற்கு உலக கோப்பைகளை வென்று கொடுத்தது போலவே சென்னை அணிக்கும் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 

அத்துடன் மின்னல் வேக விக்கெட் கீப்பிங், கடைசி நேரத்தில் களமிறங்கி எதிரணி பந்துவீச்சாளர்களை பந்தாடி இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டு அபார பினிஷிங் செய்வது என பல பரிணாமங்களைக் கொண்டுள்ள அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண் என்றே கூறவேண்டும்.

Advertisement

கடந்த பல வருடங்களாக சென்னை அணியில் விளையாடி தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அவரை “தல” என ரசிகர்கள் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். இதனால் தமிழக மக்களில் ஒருவராக உருவெடுத்துள்ள அவர் சென்னை அணியின் ரத்தமும் சதையுமாக கலந்த இதயமாக கருதப்படுகிறார். 

அப்படிப்பட்ட நிலையில் 40 வயதை தொட்டுள்ள அவர் இந்த சீசன் உட்பட எப்போது வேண்டுமானாலும் விரைவில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். எனவே அவர் அளவுக்கு இல்லை என்றாலும் சென்னை அணியை அடுத்ததாக வழி நடத்தப் போவது யார் என்ற கேள்வி சமீப காலங்களாக அந்த அணி ரசிகர்களிடம் நிலவி வருகிறது.

மேலும் சுரேஷ் ரெய்னா, டு பிளேஸிஸ் போன்ற அந்த அணியில் நீண்டகாலமாக விளையாடி வந்த வீரர்கள் தற்போது இல்லாத காரணத்தால் சென்னையின் அடுத்த கேப்டன் யாராக இருப்பார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் இதுபற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் பக்கத்தில் பேசும் போது “இந்த விஷயத்தில் ஒருவரை வளர்க்க வேண்டியுள்ளது. ஒரு சீசன் தொடங்கும் போது அந்த கேப்டனுக்கு உதவியாக ஒருவரை துணை கேப்டனாக நியமிப்பது மிகவும் சுலபமானது. இருப்பினும் அவர்களால் போட்டி பற்றிய நுணுக்கங்களில் கேப்டனுக்கு உதவ முடிகிறதா என பார்க்க வேண்டும்.

அந்தவகையில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் அணியை வழி நடத்துவதற்கான நிலையில் உள்ளார்கள். ஆனால் தோனி இருக்கும் போது அந்த முயற்சி அப்படியே நின்றுவிடும். மேலும் சமீபத்தில் நடந்த ஏலத்தில் தோனியை விட ரவீந்திர ஜடேஜா அதிக தொகைக்கு தக்க வைக்கப்பட்டார். எனவே அவர் அடுத்த கேப்டனாக இருக்கலாம். ஏனெனில் அந்த அணி நிர்வாகம் இளம் வீரர்களில் ஒருவரை கேப்டனாக வளர்ப்பதை இதுவரை பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

அவர் கூறுவது போல மொய்ன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் மொயின் அலி வெளிநாட்டு வீரர் என்பதால் ஐபிஎல் தொடரில் அனைத்து நேரமும் பங்கேற்க முடியாது. மேலும் சமீபத்தில் நடந்த ஏலத்தில் தோனியை விட அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா தான் தங்களின் புதிய கேப்டன் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அணி நிர்வாகம் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் மறைமுகமாக சூசகமாக அறிவித்தது.

Advertisement

இருப்பினும் தோனி அளவுக்கு இல்லாத அவர் இதற்கு முன் பெரிய அளவில் கேப்டன்ஷிப் செய்த அனுபவமும் இல்லாத காரணத்தால் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக யார் வருவார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் அந்த இடத்தில் ரவீந்திர ஜடேஜா வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News