சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்பதே ஒரு அழகு தான் - ஷேன் வாட்சம்!

Updated: Tue, Nov 08 2022 09:33 IST
"Really Rare Talent": Shane Watson Heaps Praise On Suryakumar Yadav (Image Source: Google)

அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட மற்ற அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, இந்த முறை இலகுவாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதற்கு சூர்யகுமார் யாதவும், விராட் கோலியுமே மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இருவருமே இந்த தொடரில் இந்திய அணிக்கான தங்களது பங்களிப்பை தங்களால் முடிந்ததை விட அதிகமாகவே செய்து கொடுத்து வருகின்றனர். இதில் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் விதவிதமான ஷாட்களால் எதிரணி பந்துவீச்சாளர்களை சூர்யகுமார் யாதவ் திணறடித்து வருகிறார்.

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 225 ரன்கள் குவித்து 193.96 என அசாத்திய ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளுக்கான நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரத்தையும் விரைவாகவே எட்டினார். சூர்யகுமார் யாதவின் ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சனும் சூர்யகுமார் யாதவின் மிரட்டல் பேட்டிங்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து ஷேன் வாட்சன் பேசுகையில், “சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை வெளியில் இருப்பதே ஒரு அழகு தான். அவரை போன்ற ஒருவர் கிடைப்பதே கடினம். அந்த அளவிற்கு சூர்யகுமார் யாதவிடம் திறமை உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடியதை போன்றே சர்வதேச போட்டிகளிலும் விளையாடுவது முடியாத காரியம். ஆனால் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் விளையாடியதை விட இந்திய அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்கள் எப்பொழுதும் சவாலானதாகவே இருக்கும், அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் அதிக சவால் நிறைந்ததாக இருக்கும், ஆனால் இது கூட சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பாதிக்கவில்லை. பந்துவீச்சாளர் எந்த திசையில் பந்துவீச போகிறார், எந்த மாதிரியான பந்தை வீச போகிறார் என்பதை முன்பே கணித்து அதற்கு ஏற்றார் போல் பந்தை எதிர்கொள்வது அரிதான திறமை, ஆனால் அதுவே சூர்யகுமார் யாதவின் பெரிய பலமாக நான் பார்க்கிறேன். 

இதற்கு முன்பு கூட இவரை போன்ற வீரர்களை நாம் பெரிதாக பார்த்திருக்க மாட்டோம். சூர்யகுமார் யாதவ் இன்னும் பல போட்டிகளில் இந்திய அணிக்காக இதே போன்று தான் விளையாட போகிறார் என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை