காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப் பட்டுள்ளது. அதில் இந்தியா, இங்கிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற லீக் போட்டிகள் கடந்த ஜூலை 29 இல் துவங்கி நடைபெற்ற நிலையில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

Advertisement

அதைத்தொடர்ந்து இன்று மதியம் 3.30 மணிக்கு எட்ஜ்பஸ்டன் நகரில் துவங்கிய முதல் அரையிறுதிப் போட்டியில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட அவருடன் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஷபாலி வர்மா 76 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 15 ரன்களில் அவுட்டானார். 

Advertisement

அடுத்த ஓவரிலேயே 8 பவுண்டரி 3 சிக்சருடன் 61 ரன்களை வெளுத்து வாங்கி ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்களிலும் தீப்தி சர்மா 22 ரன்களிலும் போராடி ஆட்டமிழந்தனர். இருப்பினும் 3ஆவது இடத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்கஸ் 7 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் இந்தியா 20 ஓவர்களில் 164/5 ரன்கள் எடுத்தது.

அதைத்தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு டுங்க்லி 4 பவுண்டரியுடன் 19 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த காப்சி 13 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடி காட்டிய டேனியல் வைட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 81/3 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் நட் ஸ்கீவர் 41 ரன்களும் எமி ஜோன்ஸ் 31 ரன்களும் எடுத்து போராடி கடைசி கட்ட ஓவர்களில் ரன் அவுட்டானார்கள்.

அதன் காரணமாக போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய இந்திய வீராங்கனை ஸ்னே ராணா முதல் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்து 3ஆவது பந்தில் விக்கெட் எடுத்தார். மேலும் கடைசி 3 பந்துகளிலும் 1, 1, 6 என 8 ரன்களை மட்டுமே கொடுத்ததால் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இந்த காமன்வெல்த் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

இதை தொடர்ந்து நாளை இரவு 9.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்ல இந்தியா விளையாடுகிறது. அதில் தோற்றாலும் வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஸ்மிருதி மந்தனா முதல் ஓவரிலிருந்தே அதிரடியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு வெறும் 32 பந்துகளில் 61 ரன்களை 190.63 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்கவிட்டார்.

Advertisement

மேலும் வெறும் 23 பந்துகளில் அரை சதத்தை கடந்த அவர் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீராங்கனை என்ற தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். 

  • ஸ்மிரிதி மந்தனா : 23, இங்கிலாந்துக்கு எதிராக, 2022*
  • ஸ்மிரிதி மந்தனா : 24, நியூஸிலாந்துக்கு எதிராக, 2019
  • ஸ்மிரிதி மந்தனா : 25, இங்கிலாந்துக்கு எதிராக, 2018

அத்துடன் இப்போட்டியில் பவர்ப்ளே ஓவர்களிலேயே பட்டாசாக 51 ரன்களை விளாசிய அவர் மகளிர் கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் அரை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். அதைவிட ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற ரோஹித் சர்மாவின் ஆல்-டைம் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்தார். 

  • ஸ்மிருதி மந்தனா : 51* ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக
  • ரோகித் சர்மா : 50, நியூஸிலாந்துக்கு எதிராக
  • கேஎல் ராகுல் : 50, ஸ்காட்லாந்துக்கு எதிராக
  • ஷபாலி வர்மா : 49, தென்னாபிரிக்காவுக்கு எதிராக

அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு பின் 2000 ரன்களை குவித்த இந்திய ஓப்பனர் என்ற சாதனையும் படைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து எனப்படும் சேனா நாடுகளில் டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த இந்தியர் என்ற ரோஹித் ஷர்மாவின் சாதனையையும் சமன் செய்தார். 

  • ஸ்மிரிதி மந்தனா/ரோஹித் சர்மா : 9*
  • விராட் கோலி : 6
  • கெளதம் கம்பீர் : 5
Advertisement

அத்துடன் இந்த காமன்வெல்த் தொடரில் அதிக ரன்கள், அதிக அரை சதங்கள், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனையாகவும் அவர் முதலிடத்தில் உள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News