பப்புவா நியூ கினியா - அமெரிக்க(யுனைடெட் ஸ்டேட்ஸ்) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஓமனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பப்புவா நியூ கினியா அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க தொடக்கத்திலேயே ஸ்டீவன் டெய்லர், ஷுஷாந்த் மொதானி, மொனக் படேல், ஆரோன் ஜோன்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் களமிறங்கிய ஜஸ்கரன் மல்ஹோத்ரா தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் மூலம் அமெரிக்க அணி தரப்பில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசியா முதல் வீரர் எனும் பெருமையையும் இவர் பெற்றார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மல்ஹோத்ரா, கௌதி வீசிய இன்னிங்ஸின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸிற்கு பிறகு, தொடர்ச்சியாக ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மல்ஹோத்ரா 124 பந்துகளில் 4 பவுண்டரி, 16 சிக்சர்களை விளாசி 173 ரன்களைச் சேர்த்தார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய ஐந்தாவது வீரர் எனும் சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் அமெரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை சேர்த்தது.
இப்போட்டியில் சதம் விளாசிய அமெரிக்க வீரர் ஜஸ்கரன் மல்ஹோத்ரா இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.