இஷாந்த் சர்மாவின் காயம் எங்கள் தோல்விக்கு காரணமாக மாறியது - ரிஷப் பந்த்!

Updated: Sat, Mar 23 2024 20:15 IST
இஷாந்த் சர்மாவின் காயம் எங்கள் தோல்விக்கு காரணமாக மாறியது - ரிஷப் பந்த்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்று முடிந்த இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசன் ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது அபிஷேக் போரலின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 32 ரன்களையும், ஷாய் ஹோப் 33 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ஜித்தேஷ் சர்மா என அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் 63 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இப்போட்டியில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், “இப்போட்டியில் இஷாந்த் சர்மாவின் காயம் எங்களுக்கு பின்னடைவாக மாறியது என நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் எங்களுடைய பேட்டிங்கின் காரணமாக ஏற்கனவே ஒரு பந்து வீச்சாளர் குறைவாக இருந்தோம். அதற்கு பதிலாக களமிறங்கிய அபிஷேக் போரல் எங்களுக்கு கூடுதல் ரன்களை எடுக்க உதவினார். இதன் காரணமாக நாங்கள் ஒரு பந்து வீச்சாளர் குறைவாகவே இருந்தோம்.

இப்போட்டியில் பல்வேறு கட்டங்களில் நாங்கள் மீண்டும் கம்பேக் கொடுக்க அனைவரும் முயற்சித்தனர். மேலும் நீண்ட நாள்களுக்கு பின் நான் கிரிக்கெட் விளையாடியாதல் மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் நான் எனது ஆட்டத்தை ரசித்து விளையாடினே. ஆனால் ஒரு பந்துவீச்சாளர் இல்லாமல் விலையாடுவது நல்லதல்ல. இதற்கு என்னை மன்னிக்க வேண்டாம். ஆனால் பஞ்சாப் அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. 

அபிஷேக் போரல் புதிய வீரர். இது அவரது மூன்றாவது அல்லது நான்காவது போட்டி என்று தான் நினைக்கிறேன். ஆனால் அவர் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த சீசனில் நாங்கள் முன்னோக்கி செல்லும் போது அவரிடமிருந்து இதுபோன்ற சிறப்பான செயல்பாடுகள் தொடரும் என எதிர்பார்க்கிறேன். இத்தோல்வியிலிருந்து மீண்டும் நாங்கள் சிறப்பான கம்பேக்கை கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை